ஷா ஆலம், மே 18 – வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய உணவுக் கூடங்களை (medan selera) நவீனமயமாக்கி தரம் உயர்த்த அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (MPAJ) சுமார் 4.7 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டமானது, அம்பாங் ஜெயாவில் உள்ள தாமான் மெலாவாத்தி பழைய உணவுக் கூடம் (Medan Selera Lama Taman Melawati) மற்றும் தாமான் லெம்பா கெராமாட்டிலுள்ள 'ஏயு5' உணவுக் கூடம் (Medan Selera AU5) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
தி ஸ்டார் (The Star) ஊடக அறிக்கையின்படி, தாமான் மெலாவாத்தி பழைய உணவுக் கூடத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக மட்டும் 1.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் எதிர்வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உணவுக் கூடத்தின் கூரைகளை பழுதுபார்த்தல், பொதுக் கழிப்பறைகள் மற்றும் சுராவ் (தொழுகை அறை) வசதிகளை மேம்படுத்துதல், வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு உண்ணும் பகுதிகளை விரிவாக்கம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு இதமான சூழலை வழங்குவதற்காகப் பசுமை நிலப்பரப்பு (landscape) கூறுகளும் அங்கே சேர்க்கப்படவுள்ளன.
இந்த உணவுக் கூடங்களின் தற்போதைய நிலைமை மிகவும் பழுதடைந்து, முறையான பராமரிப்பு இன்றி காணப்பட்டதால், நகராண்மைக் கழகத்தின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச் சரியான முடிவு என்று அங்குள்ள வாடிக்கையாளர்கள் பாராட்டியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய தாமான் மெலாவாத்தி வாடிக்கையாளர் அப்துல் அஷ்ரப் அப்துல் மனாஃப் (71), "இந்த உணவுக் கூடம் மிகவும் சுவையான உணவுகளுக்கும் மலிவான விலைக்கும் பெயர் பெற்றது. ஆனால், இங்குள்ள தூய்மைக்குறைபாடும் மோசமான பராமரிப்பும் வாடிக்கையாளர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது. இறுதியாக, இதனைத் தரம் உயர்த்த முன்வந்தது மிகவும் வரவேற்கத்தக்கது," என்றார்.
அவரது நண்பரான முகமது ஹில்மான் ஹனிஃப் (67) கூறுகையில், "இந்த மேம்பாட்டின் மூலம் வழக்கமான வாடிக்கையாளர்களின் வசதி கூடுவதோடு, புதிய வாடிக்கையாளர்களையும் இது ஈர்க்கும். பணிகள் முடிந்த பிறகு பழைய வியாபாரிகள் அனைவரும் மீண்டும் தங்களின் வணிகத்தைத் தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்," என்று தெரிவித்தார்.
மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, அங்குள்ள 15 வியாபாரிகள் தற்காலிகமாக 'பஜார் மெலாவாத்தி' மற்றும் 'மேடான் செலேரா அஞ்சோங் மெலாவாத்தி' ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், தாமான் லெம்பா கெராமாட்டிலுள்ள 'ஏயு5' உணவுக் கூடத்தின் மேம்பாட்டுத் திட்டம், வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (KPKT) நிதியுதவியின் கீழ் சுமார் 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்ட விரிவான தொழில்நுட்பத் தேவைகளுக்கு உட்பட்டுச் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







