ஷா ஆலம், மே 26: அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் (MPAJ) நடப்பு ஆண்டின் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரியை (Cukai Taksiran) வசூலித்துள்ளதாகப் பதிவு செய்துள்ளது.
அதே காலக்கட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நிலுவையில் இருந்த 9 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரி பாக்கியையும் தங்களால் வெற்றிகரமாக வசூலிக்க முடிந்தது என்று அதன் துணைத் தலைவர் ஹஸ்ரோல்நிஜாம் ஷாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நகராண்மைக்கழகத்தின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய அவர், அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்தின் 2026 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி, நடப்பு ஆண்டில் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த மதிப்பீட்டு வரிக் கட்டணம் 103.5 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்றும், நிலுவையில் உள்ள வரி பாக்கி 20.1 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வசூலிக்கப்பட்ட நடப்பு மதிப்பீட்டு வரியானது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.2 மில்லியன் ரிங்கிட் அல்லது 4.68 விழுக்காடு வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.
இருப்பினும், நிலுவையில் இருந்த வரி பாக்கி வசூலிப்பு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.2 மில்லியன் ரிங்கிட் அல்லது 33.31 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் விளக்கினார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்த ஆண்டின் மொத்த மதிப்பீட்டு வரி வசூலானது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 40,000 ரிங்கிட் அல்லது 0.07 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளதாக ஹஸ்ரோல்நிஜாம் கூறினார்.
இதற்கிடையில், மதிப்பீட்டு வரி பாக்கி வைத்துள்ள வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரும் 'பாரங் இ' (Borang E) நோட்டீஸை அனுப்பும் அமலாக்க நடவடிக்கையை நகராண்மைக்கழகம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த மே 17-ஆம் தேதி வரையில் மொத்தம் 785,000 ரிங்கிட் வரி பாக்கி வைத்துள்ள 2,784 கணக்குகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலங்களைச் சேர்ந்த கம்போங் கெமென்சா, தாமான் கெராமாட், தாமான் உகாய் பிஸ்தாரி, தாமான் மெலாவாத்தி, கம்போங் உலு கிள்ளான் மற்றும் உகாய் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது என்று அவர் மேலும் விவரித்தார்.








