மின்சாரக் கட்டணப் பாதுகாப்பு நீடிக்கும்: 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் உறுதி

22 மே 2026, 7:09 AM
மின்சாரக் கட்டணப் பாதுகாப்பு நீடிக்கும்: 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் உறுதி

புத்ராஜெயா, மே 22: உலகளாவிய எரிசக்தி செலவினங்களின் உயர்வு காரணமாகப் பொருட்களின் விலைகள் மற்றும் சில பொருளாதாரத் துறைகளில் அழுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாட்டில் உள்ள சுமார் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் மின்சாரக் கட்டணப் பாதுகாப்புத் தொடர்ந்து தக்கவைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மாதத்திற்கு 600 கிலோவாட்-மணிநேரம் (kWj) வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு நுகர்வோர் இதனால் எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும், அதே வேளையில் இந்த வரம்பைத் தாண்டி மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சிறிய அளவிலான கட்டண மாற்றம் செய்யப்படலாம் என்றும் துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபாடிலா யூசுப் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் (PETRA) மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் 85 விழுக்காடு மக்களுக்கு மின்சாரக் கட்டண உயர்வு இருக்காது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி கண்டிப்பாகத் தொடரும் என்று குறிப்பிட்டார்.

தற்போது எதிர்பார்க்கப்படும் கட்டண மாற்றம் என்பது ஒட்டுமொத்த மின்சாரக் கட்டண உயர்வைக் குறிக்கவில்லை என்றும், உலகளாவிய விநியோகத் தடங்கல்களால் ஏற்பட்ட தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிச் செலவினங்களின் உயர்வே இதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

600 கிலோவாட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்துறையினர் இதனால் சிறிய அளவில் பாதிக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ ஃபாடிலா யூசுப், இது குறித்து ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்டு வருவதாகவும், அவ்வாறு மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அது மக்களுக்குப் பெரும் சுமையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, தனது உரையில் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு மற்றும் எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் மலேசியாவிலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் இந்தச் சவால்களை மிகவும் யதார்த்தமான அணுகுமுறையோடு எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.

நாட்டின் அடிப்படைத் தேவைகளின் விநியோகத்தை நிலைநிறுத்துவது, வாழ்க்கைச் செலவின உயர்வின் அழுத்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் நீண்டகால பொருளாதாரத் திறனை வலுப்படுத்துவது ஆகியவையே அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவிகள், விலைக்கட்டுப்பாடுகள் மற்றும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உத்திப்பூர்வ ஒத்துழைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

அதே வேளையில், அமைச்சின் ஊழியர்கள் தங்களின் கடமைகளை நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், தொழில்முறையுடனும் செய்ய வேண்டும் என்று நினைவூட்டிய அமைச்சர், அப்போதுதான் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க முடியும் என்றும், பொதுச் சேவையின் நன்மதிப்பு ஊழியர்களின் செயல்பாட்டிலேயே அடங்கியுள்ளது என்றும் வலியுறுத்திக் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.