ஷா ஆலம், மே 7: சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து முக்கிய மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலை பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வானிலை மாற்றங்கள் கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பெர்லிஸ், பினாங்கு மாநிலத்தின் முழுப்பகுதிகளிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு மணிநேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் அறிகுறிகள் தென்படும்போது அல்லது அத்தகைய சூழல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நேரத்திலிருந்து ஆறு மணிநேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் குறுகிய கால அறிவிப்புகளாகும்.
தற்போதைய வானிலை குறித்த உடனுக்குடனான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பெற பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தையோ, வானிலை ஆய்வு மையத்தின் சமூக ஊடகப் பக்கங்களையோ அல்லது myCuaca செயலையையோ பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








