கல்வியே இந்தியச் சமுதாயத்தை உயர்த்தும் உந்துசக்தி 'சித்திரை கலை விழாவில்' மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் உரை!

2 மே 2026, 1:24 AM
கல்வியே இந்தியச் சமுதாயத்தை உயர்த்தும் உந்துசக்தி 'சித்திரை கலை விழாவில்' மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் உரை!

பந்திங், மே 2: கல்வியே நம் இந்தியச் சமுதாயத்தை மேலோங்கச் செய்யும் உன்னத கருவியாகும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயது முதலே கல்வியின் முக்கியத்துவத்தைப் புகட்ட வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் வலியுறுத்தினார்.

நேற்று மாலை, பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற 'சிலாங்கூர் மாநில அளவிலான சித்திரை கலை விழா 2026' நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்த கன மழையையும் பொருட்படுத்தாமல் திரளாகக் கூடியிருந்த மக்களைக் கண்டு நெகிழ்ந்த அவர்,  விழா தொடங்குவதற்கு முன்பிருந்தே பெய்து வரும் இந்தத் தொடர் மழையை நான் அன்னை மகா மாரியம்மனின் அருளாகவே பார்க்கிறேன். மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்," என்று குறிப்பிட்டார். மேலும், வந்திருந்த அனைவருக்கும் தனது சித்திரை புத்தாண்டு மற்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

தனது உரையில் பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய பாப்பா ராய்டு, "இந்தத் தேவஸ்தானத்தை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, மற்ற ஆலயங்களும் நமது இந்தியச் சமுதாயத்திற்கு சமய, கலாச்சாரம் மற்றும் தற்காப்பு கலை வகுப்புகள் போன்ற  தொண்டுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சமூகச் சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்வி மட்டுமே ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டினார். குறிப்பாக, சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் இலவச தொழில்நுட்ப பயிற்சி
(TVET) போன்ற கல்வித் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு சலுகைகளை இந்தியச் சமுதாயம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய வாய்ப்புகள் நம் இளைஞர்களின் எதிர் காலத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்றும் அவர் மீண்டுமொருமுறை நினைவுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.