பந்திங், மே 2: சிலாங்கூர் மாநில அளவிலான 2026-ஆம் ஆண்டு சித்திரை கலை விழா, தமிழர் பாரம்பரிய உணர்வுடனும் நேற்று மாலை பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் தமிழர் பாரம்பரிய உணர்வுடனும் நடைபெற்றது.
மாலை மணி 7.40-க்குத் தொடங்கிய இவ்விழாவினை, சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் குத்து விளக்கு ஏற்றி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். முன்னதாக, ஆலயத் தலைவர் திரு. கே.வி. குமார், வீ.பாப்பா ராய்டு அவர்களுக்குச் சிறப்பு மரியாதைகள் செய்து, அர்ச்சனை பிரசாதங்களை வழங்கி கௌரவித்தார்.

இடைவிடாது மழை பொழிந்த போதிலும், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதே வேளையில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களும் இதில் இணைந்து சிறப்பித்தனர். இது சிலாங்கூர் மாநிலத்தின் பல்லின மக்களிடையே நிலவும் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் கோலா லங்காட் மாவட்ட அதிகாரி வை.எம். தெங்கு ரோஹானா பிந்தி தெங்கு நவாவி, கோலா லங்காட் நகராட்சி மன்றத் தலைவர் முகமது ஹஸ்ரி பின் நோர் முகமது, கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு. ஹரிதாஸ் ராமசாமி, உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு. தீபன் சுப்பிரமணியம், சிஜாங்காங் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஜுரிஹான் பின் ஹாஜி யூசோப், பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான ஆலயத் தலைவர் திரு. கே.வி. குமார், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் எனப் பலரும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, 'லீமாஸ் 2026' (LIMAS 2026) திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற சில ஆலயங்களுக்கு மாண்புமிகு பாப்பா ராய்டு அவர்கள் மானியங்களை வழங்கினார். சித்திரை கலை விழாவை எவ்வித தடையுமின்றி மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற செயற்குழுவினருக்கு அவர் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.







