கோலாலம்பூர், ஜூன் 5- இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இணையம் வழி கார் விற்பனை மோசடி தொடர்பில் 461 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவங்களால் ஏற்பட்ட இழப்பு சுமார் 54 லட்சத்து 53 ஆயிரம் வெள்ளியாகும் என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தை விட 94.5 விழுக்காடு இது அதிகமாகும். கடந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 14 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 237 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன என்றார் அவர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் 59 லட்சத்து 26 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 678 இணைய மோசடி சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டில் 552 சம்பவங்கள் தொடர்பில் புகார் பெறப்பட்ட வேளையில் இழப்பின் மதிப்பு 32 லட்சத்து 4ஆயிரம் வெள்ளியாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
வாகனங்களை இணையம் வழி வாங்கும் விஷயத்தில் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கார்களின் நடப்பு சந்தை விலையை தெரிந்து வைத்திருப்பது, சுங்க வரி விலக்களிக்கப்பட்டதாகவும் அமலாக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் கூறி கார்களை குறைந்த விலையில் விற்க முயலும் தரப்பினரை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏமாற்று நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியும் என்றும் அவர் கூறினார்.








