ஷா ஆலம், மே 29- கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்தளவை முழுமையாகப் பெற்றவர்களும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்க ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
தங்கள் உடல் நிலையின் ஆகக்கடைசி நிலவரங்களை அறிந்து கொள்வதற்கு இந்த பரிசோதனை அவர்களுக்கு உதவும் என்று சமூக கோவிட்-19 பரிசோதனை திட்டத்தின் நிர்வாகி டாக்டர் அதிரா அப்துல் வாஹிட் கூறினார்.
தடுப்பூசியைப் பெற்றவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
தடுப்பூசியைப் பெற்றவர்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியம் உள்ளது. ஆகவே இவ்விஷயத்தில் தவறான புரிதலைக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி நம்மை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றாது. மாறாக, நோய்த் தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதை தடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செக்சன 20, அலமண்டா மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில அரசின் ஏற்பாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த பரிசோதனை இயக்கத்தில் உள்நாட்டினர் மற்றுமின்றி அந்நியத் தொழிலாளர்களும் பங்கேற்று பலனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








