பொது முடக்கம் தொடர்பான கூட்டத்திற்கு மந்திரி புசார்கள்- முதலமைச்சர்களுக்கு அழைப்பில்லை
ஷா ஆலம், மே 20- நாட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பில் நாளை நடைபெறவிருக்கும் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதிமுக்கிய முடிவினை எடுக்கக்கூடிய அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதை முன்னதாக தாம் உறுதிப்படுத்தியிருந்ததாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் வேண்டுகோளின் படி அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நான் நேற்று ஒப்புதல் வழங்கியிருந்தேன். எனினும், அக்கூட்டம் மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களின் பங்கேற்பின்றி நடைபெறும் என்றத் தகவல் இன்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பில் விவாதிப்பதற்காக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையில் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டம் நாளை நடைபெறும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் முன்னதாக கூறியிருந்தார்.
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்வதை தாங்கள் நிராரிக்கவில்லை என்றும் எனினும், மன நலம் மற்றும் வேலை இழப்பு போன்ற அம்சங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மந்திரி புசார் வலியுறுத்திருந்தார்.








