ஷா ஆலம், மே 18- மாநிலத்திலுள்ள சி.ஏ.சி. எனப்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் குறிப்பாக, மெலாவத்தி அரங்கில் செயல்படும் பெட்டாலிங் மாவட்ட சி.ஏ.சி. மையத்தில் பணிகளை எளிதாக்கும் வகையில் 150 தன்னார்வலர்களை மாநில அரசு பணியமர்த்தவுள்ளது.
சி.ஏ.சி. மையங்களில் ஏற்பட்டுள்ள நெரிசலை தணிப்பதற்கும் அதன் நடவடிக்கைகளை சீராக்குவதற்கும் மாநில அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளை மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக மருத்துவ தொண்டூழியர்களால் நடத்தப்படும் அழைப்பு மையம் ஒன்றும் உருவாக்கப்படும் என்று அவர் சொன்னார்.
அரசாங்கப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற அமலாக்கத் துறையினர், செல்கேர் சுகாதாரப் பணியாளர்கள், தனியார் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களை உள்ளடக்கிய அந்த 150 தொண்டூழியர்கள் போக்குவரத்து மற்றும் கோவிட்-19 நோயாளிகள் மேலாண்மை மற்றும் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக கைளில் அணிவிக்கப்பட்ட வில்லைகளை அகற்றுவதற்கும் தனிமைப்படுத்தும் காலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மெலாவத்தி அரங்கிலுள்ள சி.ஏ.சி. மையத்திற்கு வருவோருக்காக பிரத்தியேக முகப்பிடங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மெலாவத்தி அரங்கிலுள்ள சி.ஏ.சி. மையத்திற்கு வருவோரில் 48 விழுக்காட்டினர் மேற்கண்ட இரு காரணங்களுக்காக மட்டுமே வருகின்றனர். இதனால் நோயிலிருந்து குணமடைந்தவர்கள் கூட மீண்டும் நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார் அவர்.








