41 திட்டங்கள் வாயிலாக 80,000 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிப்பு
காஜாங், மே 3- சிலாங்கூர் அரசு 41 திட்டங்கள் வாயிலாக 80,650 சிலாங்கூர் கூ இடாமான் மற்றும் சிலாங்கூர் கூ ஹராப்பான் வீடுகளை நிர்மாணிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அவற்றில் 77,000 வீடுகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்ட வேளையில் எஞ்சிய வீடுகள்‘டு ஸ்தேய்‘ எனப்படும் வாடகை கொள்முதல் திட்ட அமலாக்கத்திற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்வாண்டு இறுதிக்குள் ஆயிரம் சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட மேலும் 900 வீடுகள் டு ஸ்தேய் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் என் அவர் சொன்னார்.
பூமிபுத்ராக்களுக்கு வீடுகளை விற்கத் தவறியதற்காக மேம்பாட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை மாநில அரசு மேலும் அதிகமான டு ஸ்தேய் வீடுகளை நிர்மாணிக்க பயன்படுத்தும் என்றும் அவர குறிப்பிட்டார்.
இங்குள்ள ரெடிடென்சி அடாலியாவில் சிலாங்கூர் வீடுகளுக்கான சாவிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் வழங்கிய ஒப்புதல் மக்கள் முழுமையான வீடுகளை பெற்றிருப்பதை உறுதி செய்வதில் தாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டை புலப்படுத்தும் வகையில் உள்ளது என குறிப்பிட்டார்.
அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கொண்ட திட்டங்களை இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்ற முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.








