கோலாலம்பூர், ஏப் 30- நாட்டிலுள்ள மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வை ஒத்தி வைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த டோல் கட்டண உயர்வு கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி அமலுக்கு வருவதாக இருந்தது என்று முதன்மை போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யுசுப் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
இந்த டோல் கட்டண உயர்வு ஷா ஆலம் விரைவுச்சாலை (கெசாஸ்), தென் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை (எஸ்.கே.வி.இ.), கிழக்கு கரை நெடுஞ்சாலை 2(எல்.பி.டி.2) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்ததாக அவர் சொன்னார்.
இதுதவிர, வடக்கு- தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்), டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலை(எல்.டி.பி.). கோலாலம்பூர்-புத்ரா ஜெயா நெடுஞ்சாலை (எல்.டி.பி.) உள்பட 21 நெடுஞ்சாலைகளில் அனைத்து வகை வாகனங்களையும் உட்படுத்திய டோல் கட்டண உயர்வு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த டோல் கட்டண உயர்வு ஒத்தி வைப்பு காரணமாக அரசாங்கத்திற்கு 225 கோடி வெள்ளி நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், டோல் கட்டணத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பில் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தை வரும் 2023ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் என்றார்.








