பெட்டாலிங் ஜெயாவில் பொது மருத்துவமனையின் தேவை மிகவும் அவசரம், மற்ற மாவட்டங்களுக்கும் கவனம் செலுத்தப்படும்: மந்திரி புசார்

30 மே 2026, 2:06 AM
பெட்டாலிங் ஜெயாவில் பொது மருத்துவமனையின் தேவை மிகவும் அவசரம், மற்ற மாவட்டங்களுக்கும் கவனம் செலுத்தப்படும்: மந்திரி புசார்

கோம்பாக், மே 29: பெட்டாலிங் ஜெயாவில் (PJ) அதிக மக்கள் தொகை இருப்பதன் காரணமாக, அங்கு புதிய பொது மருத்துவமனை கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஓல்ட் டவுன் (Old Town) மற்றும் தாமான் மேடான் (Taman Medan) போன்ற பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த மருத்துவமனை மிகவும் அவசியமானது என்று மந்திரி புசார் கூறினார்.

"தற்போது அதிக கொள்ளளவு கொண்ட மருத்துவமனைக்கான அவசரத் தேவை பெட்டாலிங் ஜெயாவில்தான் உள்ளது," என்று அவர் இன்று தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் நடைபெற்ற புக்கு
ஹிஜாவ்' (Buku Hijau) திட்ட பங்கேற்பாளர்களிடம் தற்காலிக உபயோக உரிம (TOL) ஒப்புதல் கடிதங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இருப்பினும், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான அதிக தேவை காரணமாக கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் போன்ற பிற மாவட்டங்களில் உள்ள சுகாதார வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

மாநில மேம்பாட்டு நடவடிக்கைக் குழுவின் மூலம் கடந்த ஆண்டு முதல் இந்த புதிய மருத்துவமனை திட்டம் குறித்து மாநில அரசு தீவிரமாக விவாதித்து வருவதாக அமிருடின் கூறினார்.

முன்பு முன்மொழியப்பட்ட இடங்களுக்கான செலவு அதிகமாக இருக்கும் என்ற கவலை எழுந்ததையடுத்து, மாற்று இடங்களை அடையாளம் காணும் பணி மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கான மிகவும் பொருத்தமான இடமாக தாமான் மெடான் தேர்ந்தெடுக்கப்பட்டது.

"அதிக ஆதரவு தேவைப்படும் ஓல்ட் டவுன் மற்றும் தாமான் மேடான் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்குச் சேவை வழங்க இந்த இடம் மிகவும் ஏற்றது," என்று அவர் கூறினார்.

அதேவேளையில், மோரிப் மற்றும் சிப்பாங் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் மகப்பேறு சிகிச்சை உட்பட சில சுகாதார சேவைகளைப் பெறுவதில் இன்னும் சிரமங்களை எதிர்
கொண்டு வருவதாகவும் அமிருடின் சுட்டிக் காட்டினார்.

"கோலா சிலாங்கூரில் ஏற்கனவே ஒரு மருத்துவமனை உள்ளது, ஆனால் அது சிறந்த வசதிகளுடன் மேம்படுத்தப்பட வேண்டும். மோரிப்பில், இன்னும் சில மக்கள் மகப்பேறு சிகிச்சைக்காக போர்ட் டிக்சனுக்குச் செல்கின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகளை நிர்மாணிப்பது மற்றும் மேம்படுத்துவது மலேசியச் சுகாதார அமைச்சின் (KKM) அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான விவகாரங்களில் மட்டுமே மாநில அரசு உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவைத் தவிர, உலு சிலாங்கூர் போன்ற பகுதிகளுக்கும் அரசு மருத்துவமனை வசதி தேவை என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த
மந்திரி புசார் அமிருடின் இவ்வாறு கூறினார்.

புதிய பெட்டாலிங் ஜெயா மருத்துவமனையை அமைப்பதற்காக, தற்போது எக்ஸ் பார்க் பிஜே சவுத் (X Park PJ South) விளையாட்டு வளாகம் அமைந்துள்ள தாமான் மெடானில் ஆறு ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் கடந்த மே 27ஆம் தேதி அறிவித்திருந்தார்.

செங்குத்து வடிவமைப்பில் (Vertical concept) உருவாக்கப்படவுள்ள 500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, அணுகல்தன்மை, கொள்ளளவு, நிலத்தின் விலை மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு அருகாமையில் இருத்தல் ஆகிய அடிப்படையில் அப்பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அமிருடின் அதே நாளில் கூறியிருந்தார்.

இந்த மருத்துவமனை திட்டத்திற்காக சுகாதார அமைச்சகத்திடம் நிதி ஒதுக்கீடு இருப்பதை மாநில அரசு அறிந்திருப்பதாகவும், இருப்பினும் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஒப்புதல் பெறுதல் போன்ற சில செயல்முறைகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

"நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை எளிதாக்க நாங்கள் உதவுவோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனைத் திட்டம் தொடக்கத்தில் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் (RMK13) சேர்க்கப்படவில்லை என்றாலும், அரசாங்க மேம்பாட்டு ஒதுக்கீடு மதிப்பாய்வு மூலம் சுகாதார அமைச்சு இதற்கான நிதியைக் கோர முடியும் என்று டாக்டர் சுல்கிப்லி நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.