ஷா ஆலம், மே 26: மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முழுமையான பொருளாதாரத் தாக்கத்தை மலேசியா இன்னும் உணரவில்லை.
எரிபொருள் செலவு அதிகரிப்பு மற்றும் விநியோகத் தடைகளால் மற்ற நாடுகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மலேசியா தற்போது தாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என நிதி ஆலோசகரும் சமூக ஊடகப் பிரபலமுமான அகமட் ஃபைசுதீன் ரசாலி தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதல் பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டாலும், விநியோகப் பற்றாக்குறை உள்ளிட்ட உண்மையான பொருளாதாரத் தாக்கங்களை நாடும் மக்களும் தாமதமாகவே உணர்வார்கள் என அவர் விளக்கினார்.

"மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியர்கள் தற்போதும் குறைந்த விலையில் எரிபொருளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு மானியங்கள் மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மூலம் அடிப்படைப் பொருட்களின் விலையை அரசாங்கம் பாதுகாத்து வருகிறது."
"இருப்பினும், தற்போதைய செலவின அதிகரிப்பைச் சமாளிக்க அரசாங்கம் தனது நிதியை மிக வேகமாகச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டான ஜூன் அல்லது ஜூலை வாக்கில் மக்கள் இதன் தாக்கத்தை மிகக் கடுமையாக உணரத் தொடங்குவார்கள்," என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
பொருளாதாரம் மேலும் மோசமடையக் கூடும் என்ற நிலையிலும், மக்கள் இன்னமும் மெத்தனமாகவும் அக்கறையின்றியும் இருப்பதை ஃபைசுதீன் சுட்டிக்காட்டினார்.
எந்த ஒரு பொருளாதாரத் தாக்கமும் உடனடியாக ஏற்படாது; அது ஒரு நீண்ட விநியோகச் சங்கிலியைக் கடந்து, பல கட்டங்களைத் தாண்டிய பின்னரே இறுதிப் பயனாளர்களை (வாடிக்கையாளர்களை) வந்தடையும் என்றார் அவர்.
பிரதமர் துறை இலாகாவின் பொருளாதார ஆலோசகர் நுர்ஹிஷாம் உசேன் சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார். இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே எண்ணெய் விநியோகத்தில் நிலையற்றத் தன்மை ஏற்படலாம் என்றும், அது அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம் என்றும் நுர்ஹிஷாம் எச்சரித்திருந்தார்.
விநியோகச் சங்கிலி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், போர் விரைவில் முடிவுக்கு வந்தாலும் அதன் மோசமான விளைவுகள் தொடரவே செய்யும் என கடந்த வாரம் பிஎஃப்எம் (BFM) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நுர்ஹிஷாம் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டிக்டாக்கில் 'ஃபைஸ் அகமட்' எனப் பரவலாக அறியப்படும் அகமட் ஃபைசுதீன், மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கியக் குறிப்புகளைப் பொதுமக்களுக்காகப் பட்டியலிட்டுள்ளார்.








