செல்கேட் நிபுணத்துவ மருத்துவமனையின் புதிய கிளைகள் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

22 மே 2026, 1:52 AM
செல்கேட் நிபுணத்துவ மருத்துவமனையின் புதிய கிளைகள் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷா ஆலம், மே 22 –செல்கேட் கார்ப்பரேஷன் (Selgate Corporation) நிறுவனம், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சிப்பாங் மற்றும் செத்தியா ஆலம் ஆகிய இரு பகுதிகளில் தனது புதிய நிபுணத்துவ மருத்துவமனைகளைத் (Hospital Pakar Selgate) திறக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுகாதாரச் சேவைகளுக்கான தேவை பொதுமக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த விரிவாக்கத் திட்டங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சிப்பாங் நகரில் அமையவிருக்கும் புதிய கிளை நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்திலும், செத்தியா ஆலம் கிளை எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செல்கேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நூர் ஹிஷாம் முகமட் கூத் ஊடகங்களிடம் பேசுகையில், ஒரு புதிய மருத்துவமனையைத் திறப்பதற்கும் அதனை வெற்றிகரமாக இயக்குவதற்கும் அதிக அளவிலான மூலதனமும் செயல்பாட்டுச் செலவுகளும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதே வேளையில், திறக்கப்படும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதிய எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்வது தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, மலேசிய சுகாதார அமைச்சு (KKM) விதித்துள்ள நிபந்தனைகளின்படி, ஒரு படுக்கைக்கு இரண்டு செவிலியர்கள் (1:2) என்ற விகிதாச்சாரத்தை நிறைவு செய்வது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

நாட்டின் மருத்துவத் துறையினர் பலர் தங்களின் பணி வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளை நோக்கிச் செல்வதால், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள செவிலியர் பற்றாக்குறை இந்த சவாலை மேலும் தீவிரமாக்கியுள்ளதாக அவர் விவரித்தார்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும், செல்கேட் நிறுவனம் அவசர அவசரமாகத் தனது கிளைகளைப் பெருக்குவதில் கவனம் செலுத்தாமல், திட்டமிட்ட இலக்குகளைத் துல்லியமாக அடைவதில் உறுதியாக உள்ளது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் மொத்தம் 1,000 படுக்கை வசதிகளைக் கொண்ட 7 மருத்துவமனைகளைத் திறக்க அந்நிறுவனம் இலக்குக் கொண்டுள்ளது.

இருப்பினும், தற்போதைய சூழலில் சிலாங்கூர் மாநிலத்தில் தங்களின் மருத்துவச் சேவையை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அதன் பின்னரே மலேசியாவின் இதர மாநிலங்களுக்கும், தொடர்ந்து சர்வதேச அளவிலும் தங்களது சேவைகளை விரிவாக்கம் செய்யப் போவதாகவும் டத்தோ நூர் ஹிஷாம் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரவாங் நகரில் திறக்கப்பட்ட முதலாவது செல்கேட் நிபுணத்துவ மருத்துவமனை, மத்திய பிராந்தியத்தில் அந்நிறுவனத்தின் மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சிலாங்கூர் மாநில மக்களுக்குத் தரமான, அக்கறையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருத்துவச் சேவைகளை வழங்குவதே தங்களின் நீண்டகால நோக்கம் என்பதை இந்த மருத்துவமனை நிரூபித்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க ரவாங் செல்கேட் நிபுணத்துவ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.