ஷா ஆலாம், மே 17 – பண்டார் பாரு கிள்ளான், ஜாலான் பெக்கான் பாருவில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) மூன்று பாதசாரிகள் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற (langgar lari) கார் விபத்து தொடர்பாக 75 வயது முதியவர் ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொடூர விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்துப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று காலை 11:40 மணியளவில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனையில், அவருக்கு முந்தைய குற்றப் பின்னணியோ அல்லது போதைப்பொருள் தொடர்பான வழக்குகளோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்த மேல் விசாரணைக்காக அவர் தடுப்பு காவலில் (remand) வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று விஜய ராவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஏதேனும் கூடுதல் தகவல்கள் அல்லது சான்றுகள் வைத்திருக்கும் பொதுமக்கள், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது இந்த வழக்கின் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் அகமட் ஃபட்ஸ்லி அப்துல்லாவை 017-5843860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு விஜய ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மே 15 அன்று நிகழ்ந்த இந்த விபத்தில், அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று மூன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 57 மற்றும் 62 வயதுடைய சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனம் மோதிய வேகத்தில் அந்த இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.








