கோலாலம்பூர், மே 6: சிலாங்கூர் மாநிலத்தின் எதிர்கால நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், நீர் இருப்பு விகிதத்தை (Water Reserve Margin) வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுங்கை ரசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (WTP) முதற்கட்டப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் (Air Selangor) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் சாஃபியான் கசாலி இன்று 'பெர்னாமா ரேடியோ'வின் 'ஜண்டேலா ஃபிகிர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
முதற்கட்டப் பணிகளைத் தொடர்ந்து, அதே அளவிலான கொள்ளளவு கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளும் மாநிலத்தின் வளர்ந்து வரும் நீர் தேவையை ஈடுகட்டத் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
நீர் விநியோகத் தடைகள் குறித்த புகார்களுக்கு மிக விரைவாகத் தீர்வு காணும் வகையில், 'இன்டெலிஜென்ட் கமாண்ட் சென்டர்' (ICC) மூலம் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளை ஆயர் சிலாங்கூர் பலப்படுத்தி வருகிறது.
மேலும், செமினி 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்கள் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகச் செயல்பாடுகளை மிகவும் திறமையாகக் கண்காணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற 'உலகளாவிய நீர் உச்சி மாநாட்டில்' (Global Water Summit 2025) ஆயர் சிலாங்கூர் பெற்ற அங்கீகாரம், ஒரு சிறந்த பயன்பாட்டு அமைப்பை நிர்வகிப்பதில் அந்நிறுவனத்தின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
குறிப்பாக, வருவாய் ஈட்டாத நீர் (NRW) இழப்பைக் குறைப்பதில் காட்டிய தீவிரமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
கடந்த ஆண்டில் வருவாய் ஈட்டாத நீர் விகிதத்தை 33 சதவீதத்திலிருந்து 26.76 சதவீதமாகக் குறைத்துள்ள ஆயர் சிலாங்கூர், எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இதனை 25 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தரத் தரநிலைகளில் 99.96 சதவீத இணக்கத்தைப் பெற்றுள்ளதோடு, தேசிய நீர் துறையில் மிக உயர்ந்த தரத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும் ஆடம் சாஃபியான் பெருமிதத்துடன் தெரிவித்தார்.








