ஷா ஆலம், மே 15 – உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தின் போட்டித்தன்மையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஆசியான் வணிகக் குழுவுடன் (US-ABC) இன்று நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடலுக்குப் பிறகு, தனது முகநூல் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
சிலாங்கூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஐபிஎம் (IBM), அமேசான் (Amazon), ஆப்பிள் (Apple), போயிங் (Boeing), மைக்ரான் (Micron) மற்றும் மாஸ்டர்கார்டு (Mastercard) உள்ளிட்ட 22 முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மலேசியாவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும், US-ABC அமைப்பின் இடைக்காலத் தலைவருமான பிரையன் டி. மெக்பீட்டர்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சிலாங்கூரின் பொருளாதார எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கான ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.
அமிருடின் ஷாரி தனது உரையில், சிலாங்கூர் மாநிலம் ஏன் ஒரு சிறந்த முதலீட்டுத் தளமாகத் திகழ்கிறது என்பதற்கான முக்கியக் காரணங்களைப் பட்டியலிட்டார். குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளம், நிலையான நீர் விநியோகக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான வெளிப்படையான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவை சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதாக அவர் கூறினார்.
இந்த உயர்மட்டச் சந்திப்பில் கலந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய விநியோகச் சங்கிலி, மருந்தியல் துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்றவை குறித்துத் தங்களின் ஆலோசனைகளை வழங்கின. உயர் தொழில்நுட்பத் தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான சூழலைச் சிலாங்கூரில் மேலும் மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க நிறுவனங்களின் இந்தத் தொடர் வருகையும் முதலீடுகளும், சிலாங்கூரின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வலிமையின் மீது சர்வதேச வணிகச் சமூகம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மந்திரி புசார் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.








