கோத்தா கினபாலு, மே 6: சண்டாக்கான் மாவட்டத்தில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்த பேரிடர் நிலை, இன்றுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததாக சண்டாக்கான் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டத்தோ வால்டர் கென்சன், மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து பல்வேறு முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த பேரிடர் நிலை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்தார்.
மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBD) கீழ் இயங்கும் பல்வேறு துறையினரின் ஒருங்கிணைந்த பணிகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கம்போங் பகாகியா (Kampung Bahagia) மிதக்கும் கிராமத்தில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தினால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து துயரத்திற்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த எட்டு தற்காலிக நிவாரண மையங்களும் (PPS), அங்கு தங்கியிருந்தவர்கள் மாற்று இடங்களுக்குச் சென்றதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (மே 2) முதல் முழுமையாக மூடப்பட்டன.
தற்போது நிலைமை சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








