ஷா ஆலம், ஏப்ரல் 22 – வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பருவநிலை மாற்றம் தொடர்பான பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் ஓர் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் சிலாங்கூருடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த நெதர்லாந்து விரும்புவதாக மலேசியாவிற்கான அந்நாட்டுத் தூதர் ஜாக்ஸ் வெர்னர் கூறினார்.
குறிப்பாக நீர் மேலாண்மைத் துறையில் இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், தற்போது இரு தரப்பினரும் இது தொடர்பான கலந்துரையாடல்களையும் சில முன்னோடி முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
"நெதர்லாந்தில், நீர் மேலாண்மையில் எங்களுக்கு வலுவான நிபுணத்துவம் உள்ளது. நாங்கள் இயற்கை அடிப்படையிலான அணுகுமுறைகளை ஊக்குவிக்கிறோம். அதனையே நாங்கள் சிலாங்கூருடன் இணைந்து ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.
"வெள்ளம் ஏற்படும் போது, சேதங்களையும் உயிர் இழப்புகளையும் குறைக்க முடியும் வகையில், எங்களின் கூட்டு முயற்சிகளைத் தீவிரப்படுத்த சிலாங்கூருடன் ஓர் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திசையை நோக்கி நாம் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்."
"ஆறுகளையும் கடலையும் ஆபத்துகளாக மட்டும் பார்க்காமல், அவற்றை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் நாம் பார்க்கலாம்," என்று சிலாங்கூர் மந்திரி புசார் நிறுவனத்தின் (எம்.பி.ஐ) ஏற்பாட்டில் நேற்று செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘தாவுத்தான் முஹிப்பா’ நிகழ்ச்சியில் மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.
சிறந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகள் மூலம் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைப்பதே இந்தத் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்று வெர்னர் குறிப்பிட்டார்.
முன்னதாக, 'டச்சு சர்ஜ் சப்போர்ட்' திட்டத்தின் கீழ், இயற்கை அடிப்படையிலான அணுகுமுறைகள் மற்றும் நிலையான நீர் மேலாண்மை உள்ளிட்ட நெதர்லாந்தின் நிபுணத்துவத்தைக் கொண்டு, வெள்ளத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்த மலேசியாவுடன் (சிலாங்கூர் முக்கிய மையமாக) அந்நாடு ஒத்துழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டமானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான அணுகுமுறைகள் மூலம் வெள்ளப் பாதிப்புகளைத் தாங்கும் திறனை அதிகரிப்பதற்கான முன்னோடி முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் சபாக் பெர்ணமில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு திட்டமும் அடங்கும்.
சபாக் பெர்ணமில் உள்ள முன்னோடித் திட்டம் குறித்து மேலும் கருத்துரைத்த அவர், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு அணுகுமுறையை உருவாக்க அனைத்துத் தரப்பினரையும் இது ஒன்றிணைக்கும் என்றார்.
"இந்த முயற்சி, பல்வேறு தரப்பினரிடையே ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையை உருவாக்குவதிலும், அதை ஆற்றின் மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது," என்று அவர் கூறினார்.
இந்த ஒருங்கிணைந்த திட்டமிடல் அணுகுமுறை, நீர் மேலாண்மையில் நெதர்லாந்தின் நிபுணத்துவத்தைப் பிரதிபலிப்பதாகவும், இரு தரப்பினருக்கும் இடையில் வலுப்படுத்தப்பட்டு வரும் ஒத்துழைப்புக்கு இது ஒரு மாதிரியாக இருப்பதாகவும் வெர்னர் குறிப்பிட்டார்.
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் சிலாங்கூர்–நெதர்லாந்து ஒத்துழைப்பு: புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு
22 ஏப்ரல் 2026, 4:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிலாங்கூர் இளைஞர்கள்: புதிய தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகும் மாநில அரசு
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் 1,227 ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன
Shalini Rajamogun, Sofia Nasir
24 ஏப்ரல் 2026

selangor
சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகள் மீது குடிநுழைவுத்துறை சோதனை: 45 பேர் கைது
Pakiya
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் 285 கோயில்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




