கோம்பாக், நவ 8- தங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண உதவிய டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு பங்சாபுரி செமர்லாங் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மந்திரி புசாரும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருமான அமிருடின் கடந்த 2020 ஆம் ஆண்டில் வழங்கிய 14 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டின் மூலம் அப்பணிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் முற்றுப் பெற்றதாக அவர்கள் கூறினர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் அப்பகுதியில் முதன் முறையாக நிலச் சரிவு ஏற்பட்ட போது அங்கு நில அமிழ்வுப் பிரச்சனை உள்ளது கண்டறியப்பட்டதாக குடியிருப்பாளர்களில் ஒருவரான ஹிட்சார் அரிஸ் (வயது 47) கூறினார்.
ஹிட்சார் அரிஸ் (வயது 47)
பாதிக்கப்பட்ட பகுதிக்கு அமிருடின் உடனடியாக வருகை மேற்கொண்டு நிலைமையை நேரில் கண்டறிந்ததோடு நிதி ஒதுக்கீட்டிற்கும் விரைந்து அங்கீகாரம் வழங்கினார். பழுதுபார்ப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது குறித்து நாங்கள் மனநிறைவு கொள்கிறோம் என அவர் சொன்னார்.
இத்தகைய தலைவர்கள் இருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. பொது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக அவர் விரைந்து செயல்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.
சஃப்வான் இப்ராஹிம் (வயது 31)
உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்திய கடந்த 2019 ஆம் ஆண்டு புக்கிட் அந்தாரா பங்சா நிலச்சரிவு சம்பவம் போன்ற பேரிடர் இங்கும் நிகழுமோ என்ற அச்சத்தில் தாங்கள் இருந்ததாக சஃப்வான் இப்ராஹிம் (வயது 31) கூறினார்.
எப்போது நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் எப்போதும் வாழ்ந்து வந்தோம். அதிர்ஷ்டவசமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெரும் பாதிப்பை முன்கூட்டியே தடுத்து விட்டனர் என்று அவர் சொன்னார்.








