கோலாலம்பூர், அக் 8- நாட்டிலுள்ள பெரியவர்களில் 89.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 8 லட்சத்து 56 ஆயிரத்து 337 நேற்று வரை இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
இம்மாதம் 6 ஆம் தேதி 88.8 விழுக்காடாக இருந்த தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 0.3 விழுக்காடு அதிகமாகும். இதன் வழி நாட்டில் 90 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்யும் இலக்கை அடைவதற்கு இன்னும் 0.9 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது.
மேலும், 2 கோடியே 21 லட்சத்து 53 ஆயிரத்து 302 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 196,647 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 108, 092 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 88,555 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 4 கோடியே 52 லட்சத்து 4 ஆயிரத்து 479 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோர்களில் 4.7 விழுக்காட்டினர் அல்லது 147,938 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். 68.5 விழுக்காட்டினர் அல்லது 21 லட்சத்து 56 ஆயிரத்து 346 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.








