சுபாங் ஜெயா, அக் 6- தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடக்கும்படி சுற்றுலாத் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
சுற்றுலா மையங்களுக்கு வருவோர் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதை அதன் ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இங்குள்ள சன்வே லகூனில் நேற்று சுற்றுலா பற்றுச் சீட்டுத் திட்டத்தின் வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்றதோடு எஸ்.ஒ.பி. விதிகள் அமலாக்கத்தையும் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலா மையங்களில் 50 விழுக்காட்டு வருகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய பகுதிகள் கடந்த அக்டோபர் முதல தேதி மாற்றம் கண்டன.








