ஷா ஆலம், செப் 23- “பிக் ரெமாஜா“ எனப்படும் இளையோருக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 399 பள்ளிகள் பங்கேற்பதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.
கல்வியமைச்சின் கீழுள்ள பள்ளிகள், சமயப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக என்று அவர் சொன்னார்.
நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தில் 148,298 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் 6,095 பேர் சிலாங்கூருக்கு வெளியே உள்ள தங்கும் விடுதி பள்ளிகளில் கல்வி கற்பவர்களாவர் என்றார் அவர்.
இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கி இதுவரை 2,529 மாணவர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதாக கூறிய அவர், திட்டமிட்டபடி அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றார்.
வருகைக்கான முன்பதிவு அடிப்படையிலான இந்த தடுப்பூசித் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய 25 பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு கல்வித் தவணை தொடங்குவதற்குள் நாட்டிலுள்ள 80 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசி பெற்றிருப்பது உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு கடந்த 20 ஆம் தேதி கூறியிருந்தது.








