ஷா ஆலம், செப் 17- மலேசிய விளையாட்டுப் போட்டி (சுக்மா) மற்றும் அனைத்துலக போட்டிகளில் பங்கேற்கும் ஆற்றல் கொண்ட மின்-விளையாட்டாளர்களை உருவாக்கும் நோக்கில் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை சிலாங்கூர் அரசு தொடக்கவுள்ளது.
அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களின் ஒத்துழைப்புடன் வரும் அக்டோபர் மாதம் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
கல்வி, திறன், உடல் தகுதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இந்த மேம்பாட்டுத் திட்டம் உள்ளடக்கியிருக்கும். மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம் மற்றும் காலேஜ் கம்யூனிட்டி ஆகிய உயர்கல்விக் கூடங்களைச் சேர்ந்த பயிற்றுநர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
அனைத்துலக நிலையிலான மின்-விளையாட்டாளர்களை உருவாக்குவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கமளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது புதிய பணியாக உருவெடுத்து வரும் மின்-விளையாட்டுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக கைருடின் கடந் மாதம் 24ஆம் தேதி கூறியிருந்தார்.








