கோலாலம்பூர், செப் 14- கோவிட்-19 நோய்த் தொற்றைக் காரணம் காட்டி மக்களை இனியும் ‘அடைத்து வைப்பது‘ இனியும் பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மனோரீதியிலான விளைவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என்று அவர் சொன்னார்.
பொருளாதார மற்றும் சமூகவியல் நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதன் வாயிலாக வேலைக்குச் செல்வது மற்றும் வர்த்தகம் புரிவது போன்ற அன்றாடப் பணிகள் மூலம் மக்கள் தங்களின் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ள இயலும் என்று அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரம் மீது முடிவெடுப்பதில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் கவனத்தில் கொள்ளப்பட்டது. தற்போது பெரியவர்களில் 74.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ள நிலையில் 91.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
எனினும், தடுப்பூசி மூலம் நோய்த் தொற்றிலிருந்து முற்றாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் மக்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடித்து வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆகவேதான் சுய பாதுகாப்பு முக்கியம் எனக் கூறுகிறோம். கிள்ளான் பள்ளத்தாக்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளில் சுற்றுலா மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அதில் சிலர் முகக்கவசம் கூட அணியவில்லை என்று அவர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் நாட்டின் எதிர்காலம் நமது கையில்தான் உள்ளது. நாம் தடுப்பூசியை எப்போதும் சார்ந்திருக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.








