ஷா ஆலம், செப் 14- கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (பி.கே.பி.எஸ்) 500 உணவுக் கூடைகளைப் பெற்றது.
அரிசி, சீனி, வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், சமையல் எண்ணெய், மேகி மீ, ஆகிய பொருள்களை உள்ளடக்கிய அந்த உணவுக் கூடைகள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இந்த உணவுக் கூடைகளை வழங்கி உதவிய மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொருள்கள் உண்மையில் உதவி தேவைப்படும் தரப்பினரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க இந்த உணவுப் பொருள்கள் உதவும் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த உதவிப் பொருள்கள் கிராமத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.
நோய்த் தொற்று காலத்தில் சிரமத்தை எதிர்நோக்கியவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கையில் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடந்த மாத 23 ஆம் தேதி வலியுறுத்தியிருந்தார்.








