ஷா ஆலம், செப் 13- சுற்றுலா மையமான சிலாங்கூர் ஃபூருட் வெலி (எஸ்.எஃப்.வி.) வரும் புதன் கிழமை மறுபடியும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதை முன்னிட்டு அன்றயை தினம் மூன்று டிக்கெட் வாங்வோருக்கு ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.
இந்த சுற்றுலா மையத்தில் பெரியவர்களுக்கு 15 வெள்ளியும் சிறார்களுக்கு 10 வெள்ளியும் கட்டணமாக விதிக்கப்படும் வேளையில் அந்நிய நாட்டினருக்கு 30 வெள்ளியும் சிறார்களுக்கு 25 வெள்ளியும் கட்டணம் விதிக்கப்படுவதாக அம்மையத்தின் சந்தை பிரிவு நிர்வாகி நேர் ரஷிடா முகமது ரய்ஹான் கூறினார்.
இந்த டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் சுற்றுப்பயணிகள் அந்த 1,000 ஏக்கர் மையத்தை சிறப்பு டிரம் வண்டி மூலம் சுற்றிப்பார்ப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும். அப்பயணத்தின் போது அவர்கள் பழத்தோட்டங்களை மட்டுமின்றி மான், முயல் போன்ற உயிரினங்களையும் காண முடியும் என்றார் அவர்.
இங்கு பழத்துண்டுகள் சுற்றுப்பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் இதுதவிர பழங்கள் மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் வாங்குவதற்கு ஏதுவாக சிறப்பு கூப்பன்களையும் அவர்கள் பெற முடியும் என்று நோர் ரஷிடா குறிப்பிட்டார்.
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் மட்டுமே இந்த பழ பள்ளத்தாக்கு சுற்றுலா மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
.இந்த சுற்றுலா மையம் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர் 016-6880792 என்ற எண்களில் அல்லது support@pkps.gov.my அல்லது selangorfruitsvalley@gmail.com மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
சுமார் 1,000 ஹெக்டர் பரப்பளவிலான இந்த மையத்தில் டுரியான், கொய்யா, பழா, மா, திராட்சை உள்ளிட்ட இருபது வகையான பழ மரங்கள் உள்ளன.
இது தவிர சுமார் 3,000 தேன் கூடுகளும் இங்கு உள்ளன. தீபகற்ப மலேசியாவில் தேன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக இந்த எஸ்.எஃப்.வி. தோட்டம் விளங்குகிறது.








