ஷா ஆலம், ஆக 9- சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்குவதற்கு பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் வாயிலாக மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்நடவடிக்கையின் வழி சிப்பாங் மற்றும் கோல சிலாங்கூரில் அனைவரும் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் உலு லங்காட், கோல லங்காட் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்
இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசு பிக் திட்டத்துடன் இணைந்து செயலாற்றவுள்ளது என்றார் அவர்.
தற்போது பெட்டாலிங் மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.06 விழுக்காடாகவும் உலு சிலாங்கூரில் 57.24 விழுக்காடாகவும் கிள்ளானில் 51.13 விழுக்காடாகவும் கோம்பாக்கில் 25.19 விழுக்காடாகவும் உள்ளதாக அவர் சொன்னார்.
தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைந்து மேற்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகள் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை காணொளி வாயிலாக பகிர்ந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.








