புது டில்லி, ஜூன் 24- இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடி பேராக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,848 பேர் அந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 1,358 பேர் கோவிட்-19 நோய்க்கு பலியான வேளையில் இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 390,660 ஆக உயர்வு கண்டுள்ளது.
அந்நாட்டில் கடந்த சில தினங்களாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் வகை நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த புதிய வகை நோய்த் தொற்று பரவல் குறித்து மகரஷ்ட்ரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிகவும் ஆபத்தான அந்த டெல்டா வகை நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்வது, நோயாளிகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்டா வகை நோய்த் தொற்றிலிருந்து உருமாற்றம் கண்ட டெல்டா பிளஸ் புதிய வகை நோய் தொற்று இந்தியாவில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அது விரைவாக பரவும் தன்மை கொண்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.








