ஷா ஆலம், மார்ச் 24- சிலாங்கூரில் முதன் முறையாக வான் போக்குவரத்து கண்காட்சி (சாஸ்) வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ளது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கண்காட்சி ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சுபாங் ஸ்கைபார்க்கில் நடைபெறும் என்ற முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
வான் போக்குவரத்து சார்ந்த 30 நிறுவனங்கள் பங்கு கொள்ளும் இந்த கண்காட்சியில் சுமார் 5,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த சாஸ் 2021 கண்காட்சியில் விமான சாகசம், கருத்தரங்கு, விமானத் துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் உள்பட பல்வேறு அங்கங்கள் இடம் பெறும் என்று அவர் தெரிவித்தார்.
வான் போக்குவரத்து துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வர்த்தக ஒருங்கமைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்த கண்காட்சி பெரிதும் துணை புரியும் என்று அவர் சாஸ் 2021 கண்காட்சியின் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் வான் போக்குவரத்து துறை வளர்ச்சி காண்பதற்கும் உள்நாட்டு நிறுவனங்களும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரும் இத்துறையில் வர்த்தக வாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த கண்காட்சி பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூறியிருந்தார்.








