ஷா ஆலம், பிப்.21-
மாநிலத்தின் அனைத்து கிராமத் தலைவர்களுக்கும் பெடூலி சேஹாட் அட்டை வழங்கப்படுவதற்கு மாநில் ஆட்சிக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது என்று பாரம்பரிய கிராமத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.
நடப்பில் உள்ள கிராமத் தலைவர்களில் 80 விழுக்காட்டினர் இந்த உதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
முன்னதாக, இந்த சுகாதார அணுகூலத்தை இத்தரப்பினருக்கு வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என்று அச்சத்தால் அவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படாமல் இருந்தது என்றார் அவர்.
“கிராமத் தலைவர்களுக்கு மாத அலன்சாக ரிம 1,200 மட்டுமே வழங்கப்படுவதால் அவர்கள் இந்த அட்டையைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். எனவே, ஒரு கிராமத் தலைவராக இருப்பதால் ஒருவருக்கு இந்த அட்டை வழங்கப்படுகிறது என்று பொது மக்கள் தவறாக எண்ணக் கூடாது” என்று அவர் விவரித்தார்.
“எனவே, கடந்த வாரம் நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த அட்டைகள் வழங்கப்படுவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது” என்று இங்குள்ள டேவான் ஜுப்ளி பேராக் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷாவில் நடைபெற்ற மாநாட்டிற்கு பின்னர் ரோட்சியா தெரிவித்தார்.








