ஷா ஆலம், ஜூலை 30-
வர்த்தகர்களின் வணிக உரிமை என்பதால், சிலாங்கூரில் உள்ள நெகிழி பை தொழிற்சாலைகளை மூட இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும், வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் கோரிக்கை குறைந்து போனால், அந்தத் தொழிற்சாலைகள் தாமாக மூடுவிழா காணக் கூடும் என்று சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
எனவே, நெகிழி பைகள் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளும்படி மக்களுக்கு போதிக்க வேண்டும் என்று அனைத்து தரப்புகளையும் அவர் கேட்டுக் கொண்டார்/
“நாம் நெகிழி பை தொழிற்சாலைகளை உடனடியாக மூட முடியாது, ஏனெனில் அது அவர்களின் வணிக உரிமை என்று அவர்கள் கூறுகின்றனர்” என்றார் அவர்.
“மாறாக, அதன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து மக்களுக்கு போதிக்க வேண்டும். இந்த நெகிழிப் பைகளுக்குப் பதிலாக அழியக் கூடிய பைகள் மற்றும் காகிதப் பைகளைப் பயன்படுத்தக் கூடிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.








