ஷா ஆலம், ஏப்ரல் 29: மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளால் பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களைக் களைவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு நடத்திய வட்டமேசை விவாதத்தில் ஐந்து முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மையப்படுத்தப்பட்ட வணிகப் போர்டல் உருவாக்குதல், நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வேலை முறையை விரிவுபடுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்று மாநில மகளிர் மேம்பாடு மற்றும் நலத்துறை எக்ஸோ உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
இன்று மாநிலச் செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வழங்கும் உதவிகள், சந்தை நிலவரங்கள் மற்றும் பல்வேறு முன்னெடுப்புகளைப் பெண் தொழில்முனைவோர் எளிதில் பெறுவதற்கு ஏதுவாக 'ஒருங்கிணைந்த தரவு மையம்' மற்றும் 'ஒரே இடத்திலான இணையப் பக்கம்' (One-stop Portal) ஆகியவற்றை உருவாக்கப் பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை தேவையற்ற சிவப்பு நாடா முறையைக் குறைப்பதோடு, நெருக்கடியான காலங்களில் பெண் தொழில்முனைவோர் துரித முடிவுகளை எடுக்கத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்க உதவும் என்று அவர் விவரித்தார்.
மேலும், குடும்ப நலன் சார்ந்த வேலைச் சூழலை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விவாதத்தில் பங்கேற்றவர்கள் முன்வைத்தனர். குறிப்பாக, வீட்டிலிருந்தே பணிபுரியும் (BDR) கொள்கை மற்றும் முறையான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்று அன்ஃபால் சாரி சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்ட வேலை முறைகள் பெண் தொழில்முனைவோரின் நிதிச் சுமையைக் குறைப்பதோடு, குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் அவர்களின் உற்பத்தித்திறனைத் தக்கவைக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசு முகமைகள், நிதி நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் என சுமார் 30 பேர் கலந்துகொண்ட இந்த அமர்வானது, மேற்காசியக் கிரிஸினால் ஏற்படும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் செயல்பாட்டுச் செலவு உயர்வு போன்றவற்றை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டது.
இதில் குறிப்பாக பெண்களால் நடத்தப்படும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (PMKS) எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதே இந்த அமர்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தீர்மானங்கள் சிலாங்கூர் மாநிலப் பெண் தொழில்முனைவோரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.








