ஷா ஆலாம், ஜூன் 6: கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் (SPM) தேர்வில் சிறந்து விளங்கிய 152 மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டும் வகையில் மொத்தம் ரிம 36,550 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மாணவர்களின் கடின உழைப்பையும் சாதனையையும் அங்கீகரிப்பதற்காகவும், உயர்கல்வி நிலைகளில் அவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் படைக்க ஊக்கமளிப்பத-ற்காகவும் இந்த உதவித் தொகை வழங்கப் படுவதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.
"கல்வித் திட்டம் மற்றும் மனித மூலதன மேம் பாட்டை வலுப்படுத்துவதில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பினைப் பிரதிபலிக்கும் அடையாளமாக இந்த ஊக்கத்தொகை அமைகிறது," என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று ஷா ஆலாம் மாநகர மன்றத்தின் (MBSA) ஆஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற 2025 எஸ்.பி.எம் சிறந்த தலைமுறைக்கான நிகழ்வில் (Majlis Generasi Cemerlang SPM 2025) இந்த மாணவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்பட்டனர்.அதே வேளையில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வழிகாட்டிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வி அமைச்சகம் ஆகியோரின் பங்களிப்புக்கும் பிரகாஷ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"இந்த வெற்றி, அவர்கள் தொடர்ந்து அறிவியலைத் தேடுவதற்கும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்காக தங்களின் இலட்சியங்களை அடைவதற்கும் ஒரு உந்துசக்தியாக அமையட்டும்," என்று அவர் மேலும் கூறினார்.




