ஷா ஆலம், ஜூன் 4: நேற்று மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள வீடொன்றின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஆசிரியர் ஒருவருக்கு முகம் மற்றும் கைகளில் சுமார் 50 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டன.
நேற்று காலை 10.26 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், தம்பின், சுல்தான் மன்சூர் ஷா இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் 29 வயதுடைய முகமட் எடாம் சுல் என்பவர் காயமடைந்தார். எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, அவர் சமையலறையைச் சோதனை செய்யச் சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் சமையலறையைச் சோதனை செய்தபோது திடீரென சிலிண்டர் வெடித்ததில் அவரது உடலின் பல பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) மக்கள் தொடர்பு அதிகாரியும், தீயணைப்புத் துறை துணை கண்காணிப்பாளருமான முகமட் ஹஃபிசாதுல்லா ரஷிட் தெரிவித்தார்.
ஜேபிபிஎம்-இன் அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் என்று முகமட் ஹஃபிசாதுல்லா கூறினார்.
"தற்போதைக்கு, எரிவாயு கசிவு அபாயம் குறித்து தொடர் சோதனைகள் மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட இதர தரப்பினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வெடிப்பின் காரணமாக வீட்டின் மேற்கூரை, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்டவைக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், வெடிப்பு நிகழ்ந்த சமையலறையில் அதிக வெப்பம் மற்றும் கரும்புகை சூழ்ந்திருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவரின் நிலைமை தற்போது சீராக உள்ளது. தீக்காயங்களுக்குத் தோல் அறுவை சிகிச்சை செய்வதற்காக, அவர் கோலா பிலா மருத்துவமனையிலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.








