சிப்பாங், ஜூன் 4 – கடந்த மாதம் பூச்சோங் பகுதியில் தனது பராமரிப்பில் இருந்த ஒரு வயது 11 மாதக் பெண் குழந்தையைக் கொலை செய்ததாகக் 33 வயதுடையப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
நுர் சுஹைடா ஜமாலுடின் என்ற அந்தப் பெண், கடந்த மே 18-ஆம் தேதி காலை 9 மணி 31 நிமிடத்திலிருந்து காலை 11 மணி 24 நிமிடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள கியாம்பாங் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில், டியா ஃபாலிஷா முஸ்தகிம் என்ற குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மலேசியத் தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனையுடன், 12 பிரம்பு அடிகள் குறையாத தண்டனையும் விதிக்கப்படச் சட்டத்தில் இடமுண்டு.
துணை அரசு வழக்கறிஞர் நோர்பரஹானிம் அப்துல் ஹாலிம் முன்னிலையாகி நடத்திய இவ்வழக்கில், மஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் இக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பிற்காக எதிர்வரும் ஜூலை 14-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.








