கோலாலம்பூர், ஜூன் 3: ஹரி ராயா ஹாஜி பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறைகள் முடிவடைந்து, நகரவாசிகள் மீண்டும் தங்களின் இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்குவதால், நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) வரை பிளஸ் (PLUS) நெடுஞ்சாலைகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கக்கூடும் என பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறைகள் நிறைவடைந்துள்ளதால், தொலைதூரப் பயணங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துகள் என அனைத்தும் கிள்ளான் பள்ளத்தாக்கை (Klang Valley) நோக்கி நகரும். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்களின் பயணங்களைச் சீராகத் திட்டமிடுவதற்கு ஏதுவாக, 'பிளஸ் செயலியில்' (PLUS App) உள்ள 'MyPLUS Travel Time Advisory' எனப்படும் பயண நேர ஆலோசனைகளைப் பின்பற்றி, பரிந்துரைக்கப்பட்ட நேரங்களில் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தைச் சமநிலைப்படுத்தவும் இது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் வாகனப் பெருக்கத்தைச் சமாளிக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் நெடுஞ்சாலையின் 33 முக்கிய நெரிசல் மிகுந்த பகுதிகளில் 'ஸ்மார்ட் லேன்களை' (Smart Lanes) பிளஸ் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.
அதுமட்டுமன்றி, நெடுஞ்சாலைப் பயணிகளின் வசதிக்காக ஓய்வு மற்றும் சேவைப் பகுதிகள் (R&R), தற்காலிக நிறுத்தங்களில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட பொது வசதிகள் அனைத்தும் 24 மணி நேரமும் தடையின்றி இயங்குவதைப் பிளஸ் நிறுவனம் உறுதி செய்யும்.
நெடுஞ்சாலைகளில் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், பொதுமக்கள் பிளஸ்லைன் (PLUSLine) எண்களான 1800-88-0000 அல்லது எல்.பி.டி.2 லைன் (LPT2Line) எண்களான 1800-88-0220 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








