செலாயாங், மே 31: சிலாங்கூர் மாற்றுத் திறனாளிகளுக்கான ரஹ்மா உதவி (BRAIS) 2026-இன் கீழ், பதிவுசெய்யப்பட்ட ஆரம்பகால இடையீட்டு மையங்கள் (pusat intervensi awal) வழங்கும் சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை அடைவதை உறுதிசெய்வதற்காக, மாநில அரசு அதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து வருகிறது.
சிலாங்கூரில் உள்ள சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆரம்பகால இடையீட்டுச் சூழலியலை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகச் சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) அன்பால் சாரி தெரிவித்தார்.
"இடையீட்டு மையங்களை மேம்படுத்தும் செயல்பாட்டில், நாங்கள் மையங்களுக்கான ஆரம்பப் பதிவை மேற்கொண்டோம். இதுவரை சுமார் 300 ஆரம்பகால இடையீட்டு மையங்களின் உரிமையாளர்கள் இதில் இணைந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
நேற்று, செலாயாங் பாரு 2 தேசியப் பள்ளி (SK) திடலில் நடைபெற்ற தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதியின் மாபெரும் குர்பான் மற்றும் மக்கள் விருந்து நிகழ்வில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் கல்வியை ஆதரிப்பதற்காக BRAIS திட்டத்திற்கு RM800,000 ஒதுக்கப் பட்டுள்ளதாக அன்பால் கூறியிருந்தார்.
சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பு உதவி (ANIS) திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், 1,800 பேருக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நிதி மற்றும் நிதியல்லாத உதவிகள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கும் (OKU) அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் முழுமையான ஆதரவை வலுப்படுத்துவதே இந்த மறு பெயரிடலின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையே, பதிவுசெய்யப்பட்ட இடையீட்டு மையங்களில் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் (தெரபி) உள்ளிட்ட விதிமுறைகளை மையங்கள் பின்பற்றுவதையும் மாநில அரசு கண்காணித்து வருவதாக அன்பால் கூறினார்.
"விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் செயல் படுத்துதல் ஆகிய அம்சங்களுக்கு, ஒரு வழிகாட்டுதல் உருவாக்கப்பட வேண்டும்.
சிகிச்சை அளிக்க முடியும் என கூறிக்கொண்டு, தகுந்த நிபந்தனைகள் மற்றும் தரநிலைகளைப் பின்பற்றத் தவறும் இடையீட்டு மையங்கள் இருப்பதை நாங்கள் அனுமதிக்க விரும்ப வில்லை," என்று அவர் வலியுறுத்தினார்.
இடையீட்டு மையங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் (PBT) பதிவு மற்றும் உரிம நிபந்தனைகளை நிறைவு செய்வது மட்டுமின்றி, அவை பயன்படுத்தும் பாடத்திட்டங்கள் மற்றும் கற்றல் முறைகளும் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் அவசியத்தை அரசு தீவிரமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் இருந்தாலும், சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆதரவுச் சூழலை வலுப்படுத்தச் சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அன்பால் தெரிவித்தார்.
"தற்போதைய முக்கிய சவாலாக இருப்பது, பிரதான நீரோட்டப் பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டத்தில் (PPKI) இடப்பற்றாக்குறை நிலவுவதாகும். இப்பிரச்சினை துறை வாரியாகத் தனித்தனியே பார்க்காமல், நாடு தழுவிய அணுகுமுறையின் மூலம் விவாதிக்கப்பட வேண்டும்.
"இதனைச் செயல்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடு மத்திய அரசாங்கத்திடம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த முயற்சி அதிக அளவிலான சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் தங்கள் கல்வி உரிமையைப் பெற உதவுவதோடு மட்டுமின்றி, ஆரம்பகால இடையீட்டை மிகவும் திறம்பட வழங்கவும் வழிவகுக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.




