எல் நினோ: வெப்ப அலை, காட்டுத் தீயை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயார்நிலை

30 மே 2026, 6:25 AM
எல் நினோ: வெப்ப அலை, காட்டுத் தீயை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயார்நிலை

சைபர் ஜெயா, மே 30: எல் நினோ (El Nino) நிகழ்வின் காரணமாக இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுவதால், வெப்ப அலை மற்றும் காட்டுத் தீயை எதிர்கொள்ள மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தனது தயார்நிலையை வலுப் படுத்தியுள்ளது.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிறப்பான மற்றும் துல்லியமான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அனைத்து மாநில தீயணைப்பு இயக்குநர்களுடனும் சிறப்புச் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

"நாங்கள் மிக கவனமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். கடந்த ஆண்டு சமீபத்திய தீ விபத்துகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 70 சிறியரக வாகனங்கள் மற்றும் கூடுதல் தயார்நிலைக்காக 80 கையடக்க நீரேற்றிகள் (portable pumps) ஆகியவற்றை கொள்முதல் செய்து முழுமைப்படுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சித் துறை துணை அமைச்சர் டத்தோ ஐமான் அதிரா சாபு இன்று இங்கு தொடக்கி வைத்த தீயணைப்புத் துறையின் 'குர்பான் காசே 2026' (Qurban Kasih 2026) நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள்
சந்திப்பில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காட்டுத் தீயை எதிர்கொள்ளும் போது பேரிடர் முகாமைத்துவத்தில் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NADMA) உத்தரவு 01-ஐ செயல்
படுத்துவதை வலுப்படுத்துவது தீயணைப்புத் துறையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என நோர் ஹிஷாம் கூறினார்.

போதுமான நீர் ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அதிக திறன் கொண்ட நீரேற்றிகளைப் பயன்படுத்துவது மற்றும் நீர் விநியோகம் போதுமானதாக இல்லாத நிலையில் தீ பரவாமல் தடுக்கும் வேலிகளை (fire breaks) உருவாக்க அகழ்வாராய்ச்சிகள் (excavators) அல்லது கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"அதே வேளையில், தடையற்ற திறந்தவெளி எரிப்புகளைத் தவிர்ப்பதற்காக, அரச மலேசிய போலீஸ் படை (PDRM), சுற்றுச்சூழல் துறை (JAS) மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலம் அவ்வப்போது ரோந்து பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நாட்மா (NADMA) தரப்பிற்கும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்
படும் காட்டுத் தீ குறித்து கருத்து தெரிவித்த அவர், பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ சூழ்நிலையின் அடிப்படையில், தற்போதைய கணிப்புகள் மற்றும் வானிலை அளவீடுகள் நிலைமை மிகவும் மோசமாக இல்லை என்பதைக் காட்டுகின்றன என்றார்.

"எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் பார்த்தால் நிலைமை கவலைக்கிடமாக இல்லை, சற்று மட்டுமே அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்கள் அல்லது இடங்கள் குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அவ்வப்போது எச்சரிக்கைகளை வெளியிடும்," என அவர் தெரிவித்தார்.

பல நாட்களாக வெப்பமான வானிலை நிலவினாலும், அதன்பிறகு மழை பெய்வதால் தற்போதைய வானிலை நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, 24 உறுப்பு நாடுகள் கலந்துகொண்ட ஆசியா மற்றும் ஓசியானியா தீயணைப்புத் துறைத் தலைவர்கள் கூட்டமைப்பின் (IFCAA) பொதுச் சபையில் முதல் முறையாக மலேசியா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் உள்ள தீயணைப்புத் துறைத் தலைவர்களுக்கு
இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தக் கூட்டமைப்பில், நாட்டிற்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரமாக இந்த நியமனம் திகழ்கிறது என்றார் அவர்.

"இந்த ஆண்டு முதல் முறையாக நான் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். தலைவர் பதவியை தோக்கியோ தீயணைப்புத் துறைத் தலைவரே வகிக்க வேண்டும் என்பது விதியாக இருப்பதால், அவர் தானாகவே தலைவராக நியமிக்கப்பட்டு, மூன்று துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியப் பிராந்தியத்தில் ஏற்படும் சம்பவங்கள் மற்றும் பேரிடர்களைக் கருத்தில் கொண்டு, உறுப்பு நாடுகளுக்கிடையே நிபுணத்துவம், கருத்துகள் மற்றும் திட்டங்களைப் பகிர்ந்து
கொள்வதை இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் செயல்படுத்தப்படும் பேரிடர் மற்றும் தீ அபாயக் குறைப்பு தொடர்பான பல்வேறு முயற்சிகளின் விளக்கக்காட்சிகள் மூலம் அனுபவத்தையும் அறிவையும் பெறுவதற்கு இந்த மாநாடு உறுப்பு நாடுகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

"ஜப்பானைப் பார்த்தோமானால், அவர்கள் அடிக்கடி பூகம்பங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து விவாதிப்பார்கள். நாம் பூகம்பங்களை அனுபவிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்களின் முன்னேற்பாடுகளைப் பார்க்கும்போது, நமது தயார்நிலையை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்ற சிந்தனையை நாம் பெற முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.