காணாமல் போன மலையேறுபவர்: உயிர் பிழைப்பது உடல், மன வலிமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்தது - மலை வழிகாட்டி

29 மே 2026, 8:53 AM
காணாமல் போன மலையேறுபவர்: உயிர் பிழைப்பது உடல், மன வலிமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்தது - மலை வழிகாட்டி

தாப்பா: குனோங் பத்து புத்தேவின் 2,130 மீட்டர் உயரத்தில், வெப்பநிலை ஆறு டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடிய கடும் குளிரே, கடந்த மே 23 முதல் காணாமல் போன பெண் மலையேறி ஜஸ்லிண்டா சலுடின், 49, என்பவரைத் தேடும் மற்றும் மீட்கும் (SAR) நடவடிக்கைக் குழுவினர் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக உள்ளது.

ஐந்தாவது நாளாகத் தொடரும் இந்த தேடுதல் நடவடிக்கையில், கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிக் குறைபாடு போன்ற பிற சவால்களும் மீட்புக் குழுவினரின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பதாக பேராக் வனத்துறை மலை வழிகாட்டி (MGP) முசாஃபர் முகமது கூறினார்.

"உயர்ந்த மலைத்தொடர்களில் நிலவும் குளிரான, காற்று வீசும் சூழலைத் தவிர, களத்தில் உள்ள குழுவிற்கும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு சிரமங்கள் ஒரு பெரிய சவாலாக உள்ளன. இது மலைப்பகுதியில் தேடுதல் தந்திரோபாயங்களை ஒருங்கிணைப்பதைப் பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.

"இந்த இடம் கடினமான பாதையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் சில தடைகளைத் தாண்ட உடல் பலத்தைப் பயன்படுத்த வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இந்த மலையேற்றத்தை முழுமையாக முடிக்க உயர்ந்த உடல் வலிமை தேவை," என்று அவர் நேற்று கோலா போ முகா  உள்ள தீயணைப்பு கட்டுப்பாட்டு மையத்தில் (PKB) சந்தித்தபோது கூறினார்.

மலையேற்றத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த முசாஃபர், 50, களத்தில் மீட்புக் குழுவினர் செய்த ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், மலையிலிருந்து இறங்கும் போது தவறான பாதையைத் தேர்ந் தெடுத்ததே ஜஸ்லிண்டா காணாமல் போனதற்குக் காரணம் என்று நம்புவதாகக் கூறினார்.

உடல்நிலை பலவீனமடைந்ததால், ஜஸ்லிண்டாவால் தெளிவாகச் சிந்திக்க முடியாமல் போயிருக்கலாம் என்றும், அதனால் மலையடிவாரத்திற்குச் செல்லும் அசல் பாதையைப் போலவே தோற்றமளித்த தவறான வழியை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவின் எட்டாவது உயரமான மலையில் நடக்கும் இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, ஒரு மலை வழிகாட்டியாகத் தனது தொழில் வாழ்க்கையில் அவர் பங்கேற்ற மிக நீண்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும் முசாஃபர் குறிப்பிட்டார்.

"வழக்கமாக, தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிந்துவிடும். இது இடத்தின் நிலைமை மற்றும் களத்தில் இருந்து பெறப்பட்ட ஆரம்பத் தகவல்களைப் பொறுத்தது," என்றார்.

ஜஸ்லிண்டா உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்டபோது, ஒரு மலையேறியின் உயிர் பிழைக்கும் திறன் அவரவரின் மன மற்றும் உடல் வலிமையைப் பொறுத்தது என்பதால் அந்த சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று அவர் பதிலளித்தார்.

"முந்தைய நடவடிக்கைகளின் அனுபவங்கள், சவாலான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் அது சம்பவ இடத்தில் நிலவும் தற்போதைய காரணிகளைப் பெரிதும் சார்ந்துள்ளது," என்றார் அவர்.

மலையேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க எப்போதும் குழுவாக மலையேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முசாஃபர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, ஜஸ்லிண்டா மேலும் 13 நபர்கள் மற்றும் இரண்டு மலை வழிகாட்டிகளுடன், மே 23 அதிகாலை 2 மணிக்கு போஸ் கெடுங்-குனோங் பா காடிங்-குனோங் பத்து புத்தே-கோலா வோ பாதை வழியாக 'டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன்' மலையேற்றத்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜஸ்லிண்டாவும் மற்றொரு மலையேறியான முகமது ஹனாஃபி நெய்க்மாட், 41, என்பவரும் உடல்நலக் குறைவால் பாதியில் நின்றனர். இருப்பினும், ஜஸ்லிண்டா மலை உச்சியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும், கடைசியாக மே 24 (காலை 7.30) அன்று மலை வழிகாட்டியால் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.