ஷா ஆலம், மே 27: இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார மேம்பாட்டிற்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் என டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.
மாவட்டங்களுக்கும் நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த, ஒருங்கிணைந்த, நவீன மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தொழில்துறை தளவாடங்களின் (logistics) நகர்வை துரிதப்படுத்தும் என்றும், போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டை (TOD) விரிவுபடுத்தும் என்றும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"எல்.ஆர்.டி 3 (LRT3), கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு (ECRL) மற்றும் சிலாங்கூர் இரயில் பாதை (Jajaran Rel Selangor) போன்ற உத்திபூர்வமான திட்டங்களுக்கு ஆதரவளிக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மட்டுமின்றி, தொழில்துறை சுற்றுச்சூழல், திறன்மிக்க பணியாளர்கள் மற்றும் நிலையான விநியோகச் சங்கிலி ஆகியவற்றிலும் சிலாங்கூர் தயாராக இருக்க வேண்டும்.
"இரயில்வே துறையின் மேம்பாட்டிற்கு வெளியாட்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. மாறாக, பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் (MRO), தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உயர்திறன் கொண்ட உள்ளூர் தொழிலாளர்களை உருவாக்குதல் ஆகிய அம்சங்களில் சிலாங்கூர் தனது திறன்களை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலமே தற்சார்பு மற்றும் மீள்திறன் கொண்ட இரயில்வே சூழலை நாம் உருவாக்க முடியும்," என்று அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க போதுமான நிபுணத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) உருவாக்கியுள்ள 'இரயில்வே துறைக்கான சிலாங்கூர் திறமையாளர் செயல் திட்டம்' (Pelan Tindakan Bakat Selangor untuk Industri Rel) ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது என்று அமிருடின் கூறினார்.
உள்ளூர் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாநில அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இந்த முன்னெடுப்பு ஏற்புடையதாக அமைந்துள்ளது.
முன்னதாக, நாட்டின் பொதுப் போக்குவரத்து உருமாற்றக் கட்டத்தை எதிர்கொள்வதற்கான இரயில்வே துறையின் எதிர்காலத் திசையைப் பற்றி விவாதிப்பதற்காகப், பிரசரானா கட்டடத்தில் (Menara Prasarana) நேற்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில இரயில்வே தொழில்துறை மன்றத்தின் முதல் கூட்டத்திற்கு அமிருடின் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தை ஏற்று நடத்திய பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana Malaysia Berhad) நிறுவனத்திற்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"மேலும் முற்போக்கான, சிறந்த இணைப்புடைய மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சிலாங்கூரின் எதிர்காலத்திற்காக, நிலையான போக்குவரத்து திட்டத்தை வெற்றிகரமாக்க தொழில்துறை தரப்பினர் மற்றும் ஏஜென்சிகள் வழங்கும் அர்ப்பணிப்பை நான் பெரிதும் மதிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இரயில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் - மந்திரி புசார்
27 மே 2026, 6:22 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ளவும், சிலாங்கூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் RS-2 திட்டம்
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

selangor
‘சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பு’ திட்டங்கள் ஜூன் முதல் அமல் - அமிருடின் ஷாரி
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
24 மே 2026

selangor
சிலாங்கூர் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு சுல்தானின் ஒப்புதலுக்காக காத்திருப்பு; RS-2 திட்ட அறிக்கை தாக்கல் செய்வதில் கவனம் செலுத்தும்
Pakiya
26 மே 2026

selangor
சிலாங்கூரின் பொருளாதாரப் போட்டித்திறன்: ஆசியான் சந்தைகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த RS-2 திட்டம்- மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தகவல்
Mavitthran
21 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




