வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்காக MBPJ மற்றும் KGNS இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து; குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மேம்படும்

26 மே 2026, 1:30 AM
வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்காக MBPJ மற்றும் KGNS இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து; குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மேம்படும்

ஷா ஆலம், மே 26: வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப் படுத்தும் முயற்சியாக, எஸ்.எஸ் 7/2, எஸ்.எஸ் 7 (SS 7) சாலையில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தை செயல் படுத்துவதற்காக பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம் (MBPJ) மற்றும் சுபாங் தேசிய கோல்ஃப் கிளப் (KGNS) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

வெள்ளப் பிரச்சினைகளை மிகவும் விரிவாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கையாளுவதற்கு MBPJ எடுக்கும் ஒரு முன்கூட்டிய (proactive) நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் சஹ்ரி சாமிங்கோன் தெரிவித்தார்.

குறிப்பாக கிளனா ஜெயா (Kelana Jaya) பகுதியைச் சுற்றியுள்ள அதிக ஆபத்துள்ள இடங்களில், தற்போதுள்ள வடிகால் உள் கட்டமைப்பை வலுப்படுத்தும் உள்ளூர் அதிகார சபையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் இந்தத் திட்டம் என்று அவர் கூறினார்.

"இது வெள்ள அபாயத்தைக் குறைப்பது மட்டுமின்றி, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது," என்று இன்று நடைபெற்ற MBPJ முழுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

இந்த ஒத்துழைப்பு வரும் 2055-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமட் சஹ்ரியின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் 3,150 சதுர மீட்டர் நிலப்பரப்பைப் பயன்படுத்துவதோடு, நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி வடிகால் அமைப்பைச் செயல்படுத்த 630 மீட்டர் நீளப் பாதையையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம் செயல் படுத்தப்படும் காலகட்டத்தில் KGNS-க்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், திட்டத்தைக் கையாளும் குத்தகையாளருக்கு மூன்றாம் தரப்பு காப்புறுதி (third-party insurance) வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய வடிகால் அமைப்பை உருவாக்குதல், ஏறுவதைத் தடுக்கும் வேலிகள் (anti-climb fences) மற்றும் பாதுகாப்பு வலைகளை நிறுவுதல், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கோல்ஃப் வண்டிகளுக்கான பாதையை (buggy track) மீண்டும் நிர்மாணித்தல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கியப் பணிகளாகும்.

"திட்டம் முழுமையாக முடிவடைந்தவுடன், கால முறையிலான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கண் காணிப்புக்காக இந்த வசதிகள் KGNS நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்," என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தை நனவாக்கியதற்காக KGNS மற்றும் சுபாங் கோல்ஃப் மைதானக் கழகம் (PPGS) ஆகியவற்றுக்கு MBPJ தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டது.

"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான வலுவான மூலோபாய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. அதே வேளையில் பாதுகாப்பான, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான கடப்பாட்டையும் இது வலுப்படுத்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.