சைபர் ஜெயா பூனைப் பூங்காவில் 235 பூனைகள் மீட்பு: தொண்டர்கள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக உருமாற்றம்

22 மே 2026, 6:53 AM
சைபர் ஜெயா பூனைப் பூங்காவில் 235 பூனைகள் மீட்பு: தொண்டர்கள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக உருமாற்றம்

ஷா ஆலாம், மே 22: கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சைபர் ஜெயா பூனைப் பூங்காவில் இதுவரை மொத்தம் 235 பூனைகள் மீட்கப்பட்டு பராமரிக்கப் பட்டுள்ளன.

இவற்றில் 172 பூனைகள் இந்த மாதம் வரை ‘டேக் மீ ஹோம்’ (Take Me Home) திட்டத்தின் மூலம் பொதுமக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் (MPSepang) துணைத் தலைவர் முகமட் பைசால் அப்துல் ராஜி தெரிவித்தார்.

கல்வி அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGO) மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து இத்திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இத்திட்டத்தில் கல்வி அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளன,” என்று இன்று நடைபெற்ற சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்தில் அவர் கூறினார்.

இந்தப் பூங்கா ஆதரவற்ற விலங்குகளுக்கான காப்பகமாக மட்டும் செயல்படாமல், சமூக நடவடிக்கைகளில் தொண்டர்களின் ஈடுபாட்டையும் ஈர்ப்பதில் பெரு வெற்றி கண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டங்களின் வாயிலாக சுமார் 70 தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விலங்குகள் நல நடவடிக்கைகளில் சமுதாயத்தின் ஈடுபாடு, விலங்குகளின் நல்வாழ்வைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது என்றும் முகமட் பைசால் கூறினார்.

“குறிப்பாக சிப்பாங் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கும் சைபர் ஜெயா பூனைப் பூங்கா உதவி புரிகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வு குறித்து பொதுமக்களிடையே விரிவான விழிப்புணர்வை இத்திட்டம் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்கு விலங்குகளின் நல்வாழ்வு குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவர்களுக்கு சிறந்த விழிப்புணர்வையும் கல்வியையும் வழங்குவதற்கு இத்திட்டம் பெரிதும் வழிவகுக்கிறது,” என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.