ஹிஜ்ரா சிலாங்கூர்: டிஜிட்டல் மற்றும் நிதிப் பயிற்சிகள் மூலம் தொழில்முனைவோரை வலுப்படுத்துகிறது

21 மே 2026, 8:15 AM
ஹிஜ்ரா சிலாங்கூர்: டிஜிட்டல் மற்றும் நிதிப் பயிற்சிகள் மூலம் தொழில்முனைவோரை வலுப்படுத்துகிறது

ஷா ஆலம், மே 21: யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா சிலாங்கூர்) தற்போது சிறு தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், டிஜிட்டல் மற்றும் நிதி மேலாண்மைப் பயிற்சிகளின் மூலம் அவர்களை வலுப் படுத்தியும் வருகிறது.

பல தொழில்முனைவோருக்கு இன்னும் வணிக அறிவில் வலுவான அடிப்படை இல்லை என்பதால் இந்த அணுகுமுறை முக்கியமானது என்று அதன் தலைமை வணிக அதிகாரி நிலாம்மஸ்ரி ஜாபர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான சிறு தொழில் முனைவோருக்கு வங்கி அறிக்கை மேலாண்மை, பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தல் மற்றும் வணிகப் பதிவுகளைச் சரியாகப் பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை நிதி அறிவு இன்னும் குறைவாகவே உள்ளது.

"நிதியுதவி வழங்குவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது என்று நாங்கள் நம்புகிறோம். பேக்கேஜிங் (packaging), பிராண்டிங் (branding), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் நிதிப் பதிவேடுகளைப் பராமரித்தல் போன்ற அறிவு அவர்களுக்கு அவசியமாகும்.

"சிலருக்கு கடன் வரலாறு (credit history) சிறிதும் இருப்பதில்லை, இதனால் அவர்கள் வங்கிகளிலிருந்து நிதியுதவி பெறுவது கடினமாகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போதைய வணிகப் போக்குகளுக்கு ஏற்ப தொழில் முனைவோர் தங்களை மாற்றிக் கொள்ள உதவும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் முனைவோர் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் பயிற்சிகளை ஹிஜ்ரா சிலாங்கூர் தீவிரப் படுத்தியுள்ளது என்று நிலாம்மஸ்ரி கூறினார்.

டிக்டாக் (TikTok) நேரடி விற்பனை, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், பிராண்டிங், கணக்கியல் மற்றும் சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களால் நடத்தப்படும் நிதி மேலாண்மைப் பட்டறைகள் ஆகியவை வழங்கப்படும் இலவச பயிற்சித் திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.

சிறந்த கடன் திருப்பிச் செலுத்தும் பதிவைக் கொண்ட தொழில் முனைவோருக்கு, அவர்களின் வணிகத்தை விரிவுபடுத்த உதவும் வகையில், மூலோபாய நிதிப் பங்காளிகளுடன் (strategic financing partners) ஹிஜ்ரா சிலாங்கூர் இணைந்து செயல் படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பியர்-டு-பியர் (peer-to-peer), ஃபின்டெக் (fintech) வழங்குநர்கள் மற்றும் மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் போன்ற பெரிய நிதி தளங்களுடன் சாத்தியமான தொழில்முனைவோரை இணைப்பதற்காக, பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரல் வழிநடத்தும் பிரிவுடன் (TERAJU) இணைந்து செயல்படுவது இத்தகைய முயற்சிகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.

மைக்ரோ (சிறு) என்ற சிறிய வகையைத் தாண்டிய போதிலும், ஹிஜ்ரா சிலாங்கூரிடமிருந்து மீண்டும் மீண்டும் நிதியுதவி கோரும் சில தொழில் முனைவோரும் உள்ளனர்; எனவே, இக் குழுவினருக்கு RM50,000 வரம்பை மீறிய பெரிய அளவிலான நிதியுதவி விரிவுபடுத்தப்படும் என அவர் கூறினார்.

"சிறந்த முறையில் கடனைத் திருப்பிச் செலுத்தும் பதிவு மற்றும் வணிகத் திறன் கொண்ட வாடிக்கையாளர்களை நாங்கள் அடையாளம் கண்டு, அதன்பின் மேலும் வளரக்கூடிய நிதி தளங்களுக்கு அவர்களை அறிமுகப் படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.

நிதியுதவி மற்றும் பயிற்சிகளைத் தவிர, தொழில் முனைவோர் வணிகத்தை விரிவுபடுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வணிகத்தை மேலும் நிலையானதாக மாற்றவும் ஹிஜ்ரா சிலாங்கூர் வெற்றிக் கதை விருதுகளையும் மானிய உதவிகளையும் வழங்குகிறது.

2015-ஆம் ஆண்டில் நிறுவப் பட்டதிலிருந்து, RM 50,000 வரை நிதியுதவி பெற தகுதியுடைய சுமார் 90,000 தொழில்முனைவோருக்கு இந்த நிறுவனம் உதவியுள்ளது.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை, 657 தொழில்முனைவோருக்கு ஹிஜ்ரா சிலாங்கூர் RM12.5 மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.