சுக்மா 2026: RM50 மில்லியன் நிதிக்குறைப்பு விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டைப் பாதிக்காது

15 மே 2026, 10:04 AM
சுக்மா 2026: RM50 மில்லியன் நிதிக்குறைப்பு விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டைப் பாதிக்காது

ஷா ஆலம், மே 15 – 2026-ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டியின் (SUKMA) அசல் நிதி ஒதுக்கீடான 100 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவு குறைக்கப்பட்டிருப்பது, விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுத் திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.

சுமார் 50 மில்லியன் ரிங்கிட் வரையிலான இந்த நிதிக்குறைப்பானது, உபகரணங்கள் வாடகை, தொடக்க விழா நடைபெறும் இடம், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் தொண்டூழியர்களுக்கான கொடுப்பனவுகள் (Elaun), தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் மேலாண்மைச் செலவுகளில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

இன்று நடைபெற்ற 2026/2027 சிலாங்கூர் பிக்கிள்பால் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் (PICKLESPARK) தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னதாக அதிக எண்ணிக்கையிலான தொண்டூழியர்கள் திட்டமிடப்பட்டிருந்த வேளையில், தற்போது அது 5,000 பேராகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில விளையாட்டு கவுன்சில் (MSN) மற்றும் பிற மாநிலங்களின் நிர்வாகப் பங்களிப்போடு செயலக அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் சுக்மா போட்டிக்கான உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் பணிகளைப் பாதிக்காது என்றும், ஏனெனில் அவை வளர்ச்சித் திட்டங்களின் கீழ் வருகின்றன என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

உதாரணமாக, அக்குவாடிக் மையத்தின் (Pusat Akuatik) பழுதுபார்ப்புப் பணிகள் தற்போதைய சுக்மா போட்டிக்காக மட்டுமன்றி, எதிர்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கும் விளையாட்டு வீரர்களின் நீண்ட காலப் பயிற்சிகளுக்கும் பயன்படும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும், குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் போட்டிகளை நடத்த வேண்டியுள்ளதால், சம்பந்தப்பட்ட முகமைகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்த பிறகு, சுக்மா போட்டிகள் நடைபெறும் இறுதி இடங்கள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், ஆடம்பரமான தொடக்க விழாவை விட அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் மிகச் சிறந்த முறையில் நடத்துவதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா போட்டியில் மொத்தம் உள்ள 36 விளையாட்டுகளின் கீழ் 469 பிரிவுகளில் சிலாங்கூர் மாநிலத்தின் சார்பில் சுமார் 900 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது 1,200 வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், இறுதிப் பட்டியலில் இந்த எண்ணிக்கை 900 ஆகக் குறைக்கப்படும் என்றும், இந்த நிதி நெருக்கடி வீரர்களின் முன் ஏற்பாடுகளத் தடையின்றித் தொடர அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, 2026 சுக்மா போட்டிகளை மிகவும் சிக்கனமாகவும், பொறுப்புணர்வுடனும் நடத்துவதற்குச் சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்-ஹாஜ் அவர்கள் கடந்த ஏப்ரல் 26 அன்று ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி, 22-வது சுக்மா விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரையிலும், பாரா சுக்மா (PARA SUKMA) போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 10 வரையிலும் நடைபெறவுள்ளன.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.