ஷா ஆலம், மே 13 - சிலாங்கூர் மாநிலத்தில் சிறுவர்களின் ஆரம்பக் கல்வியைச் சுமையின்றித் தொடர உதவும் நோக்கில், துனாஸ் எனும் பாலர் பள்ளி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டம் குறித்து மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தகுதியுள்ள பெற்றோருக்கு மாதம் 50 வெள்ளி வீதம் இந்த நிதியுதவி வழங்கப்படும்.
இந்தத் தொகை கல்வி அமைச்சு, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS), ஒற்றுமைத் துறை அல்லது கெமாஸ் (KEMAS) ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பாலர் பள்ளிகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
விண்ணப்பிப்பதற்கான முக்கியத் தகுதிகள்:
குழந்தைகள் 5 அல்லது 6 வயதுடையவராக இருக்க வேண்டும்.
குடும்பத்தின் மாத வருமானம் 5,000 வெள்ளிக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
பெற்றோர் சிலாங்கூர் மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட பாலர் பள்ளியில் பயில வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பங்களை tunas.yawas.com.my என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் போது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள அட்டை நகல், வாக்காளர் பதிவுச் சரிபார்ப்பு நகல், சமீபத்திய சம்பள அறிக்கை மற்றும் பாலர் பள்ளிப் பதிவுச் சான்றிதழ் அல்லது கட்டண ரசீது போன்ற ஆவணங்களை மின்வடிவில் (Soft copy) பதிவேற்றம் செய்ய வேண்டும். எவ்வித ஆவணங்களையும் நேரடியாக அலுவலகத்திற்கு (YAWAS) அனுப்பத் தேவையில்லை.
2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டு வரை சுமார் 21,236 பெற்றோர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியுள்ள சிலாங்கூர் வாழ் பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








