வாஷிங்டன், மே 7: ஈரான் மீதான தனது தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், உலக வர்த்தகத்தின் முக்கிய நாடியான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்திற்கு ஏதேனும் புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், அதற்கு 'பேரழிவை' ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விடுத்துள்ள இந்த அறிவிப்பு, சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், உத்தரவு கிடைத்தால் மீண்டும் முழு அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்க அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் மத்திய கட்டளைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியில் அங்கீகரிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் "உறுதியான" நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், இந்த முக்கிய வர்த்தகப் பாதையில் நிகழ்ந்த சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக ஈரான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக முறியடித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தத் தகவலை ஈரான் முற்றாக மறுத்துள்ளது. ஈரானிய ஆயுதப் படைகள் எவ்வித ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்களையும் முன்னெடுக்கவில்லை என அதன் காத்தம் அல்-அன்பியா கட்டளைத் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஆறு படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் வெளியான தகவல்களால் அங்கு போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த இக்கட்டான சூழலில், ஈரான் "புத்திசாலித்தனமாக" செயல்பட்டு பேச்சுவார்த்தை பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், மேலும் ஈரானியர்கள் உயிரிழப்பதை தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பிட் ஹெக்செத் பேசுகையில், "வாஷிங்டன் மோதலை விரும்பவில்லை; ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் அசாதாரணமான மற்றும் அழிவுகரமான பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்," என எச்சரித்துள்ளார்.








