ஷா ஆலம், மே 5: 'சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு 2026' பிரச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு 600,000 ரிங்கிட் மதிப்பிலான சிறப்பு மானியத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று மே 4-ஆம் தேதி முதல் அக்டோபர் 31, 2026 வரை திறந்திருக்கும் என்று சுற்றுலா சிலாங்கூர் நிறுவனம் (Tourism Selangor) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள சுமார் 59 சுற்றுலா நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் இந்த மானியத்தின் மூலம் நேரடியாகப் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மானியமானது நான்கு முக்கியப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அரசாங்கத்தின் விளம்பர நிதி உதவி பெறாத அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC), மாநில அரசின் துணை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் (NGO) ஆகியவை தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையானது திட்டத்தின் தன்மைக்கேற்ப ஐந்து வெவ்வேறு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 'புசிங் சிலாங்கூர் டூலு' திட்டத்திற்கு 3,000 ரிங்கிட்டும், 'டிஸ்கவர் சிலாங்கூர்' திட்டத்திற்கு 5,000 ரிங்கிட்டும், 'ஸ்பிளெண்டிட் சிலாங்கூர்' திட்டத்திற்கு 10,000 ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளன. மேலும், பெரிய அளவிலான திட்டங்களான 'சர்ப்ரைசிங் சிலாங்கூர்' திட்டத்திற்கு 15,000 ரிங்கிட்டும், 'சிலாங்கூர் கான் அடா' திட்டத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மாநிலத்தின் சுற்றுலாச் சூழலை மேம்படுத்தும் வகையிலான உயர்தர மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா சிலாங்கூர் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, உள்ளூர் சமூகத்தின் சமூகப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும், பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு முகமைகளை ஈர்க்கும் வகையில் சிலாங்கூரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும் அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் 30 முகமைகளுக்கு மொத்தம் 300,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு தற்போது இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது 'மலேசியா சுற்றுலா ஆண்டு 2026' பிரச்சாரத்திற்குப் பக்கபலமாக அமைவதுடன், சிலாங்கூர் மாநிலத்தின் உள்ளூர் சுற்றுலாத் திட்டங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவும் என மாநில அரசு பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








