ஷா ஆலம், மே 4: கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சமூக ஊடகங்களில் பரவிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜை அவமதிக்கும் வகையிலான கேலிச்சித்திரம் தொடர்பாக நேற்று வரை நாடு தழுவிய அளவில் 280 காவல்துறை புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இந்தப் புகார்கள் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரால் செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார். மூர்க்கத்தனமான ஆத்திரமூட்டும் செயலுக்கு எதிராக இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
"இந்த விசாரணை தற்போது பண்டார் கின்ராரா அறிக்கை எண்: 4809/26-இன் கீழ் நடத்தப்படுகிறது. மேலும், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233, தேசநிந்தனைச் சட்டம் 1948 பிரிவு 4(1) மற்றும் சிறு குற்றங்கள் சட்டம் 1955 பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது."
"அரச மலேசிய காவல்துறை (PDRM) மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) இணைந்து, அரசமைப்பின் இறையாண்மைக்கு களங்கம் விளைவித்த குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த வழக்கை முழுமையாக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துகளையோ அல்லது ஊகங்களையோ வெளியிட வேண்டாம் என்றும் ஷசெலி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
வழக்கின் மேலதிக முன்னேற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் உட்பட பல தரப்பினர், அவதூறு பரப்பியவர்கள் மீது PDRM மற்றும் SKMM கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.








